அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு

Tamil Translation - Abdulhamid Albaqoi

Scan the qr code to link to this page

سورة المجادلة - ஸூரா முஜாதலா

பக்க எண்

வசனம்

வசனத்தின் உரை நடையை காண்பிக்கவும்
அடிக்குறிப்பைக் காண்பிக்கவும்

வசனம் : 1
قَدۡ سَمِعَ ٱللَّهُ قَوۡلَ ٱلَّتِي تُجَٰدِلُكَ فِي زَوۡجِهَا وَتَشۡتَكِيٓ إِلَى ٱللَّهِ وَٱللَّهُ يَسۡمَعُ تَحَاوُرَكُمَآۚ إِنَّ ٱللَّهَ سَمِيعُۢ بَصِيرٌ
1. (நபியே!) எவள் தன் கணவரைப் பற்றி உம்மிடம் தர்க்கித்து (அவரைப் பற்றி) அல்லாஹ்விடமும் முறையிட்டாளோ, அவளுடைய முறையீட்டை அல்லாஹ் நிச்சயமாகக் கேட்டுக் கொண்டான். (அதைப்பற்றி) உங்கள் இருவரின் தர்க்க வாதத்தையும் அல்லாஹ் செவியுற்றான். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) செவியுறுபவன், (ஒவ்வொருவரின் செயலையும்) உற்று நோக்குபவன் ஆவான்.
வசனம் : 2
ٱلَّذِينَ يُظَٰهِرُونَ مِنكُم مِّن نِّسَآئِهِم مَّا هُنَّ أُمَّهَٰتِهِمۡۖ إِنۡ أُمَّهَٰتُهُمۡ إِلَّا ٱلَّٰٓـِٔي وَلَدۡنَهُمۡۚ وَإِنَّهُمۡ لَيَقُولُونَ مُنكَرٗا مِّنَ ٱلۡقَوۡلِ وَزُورٗاۚ وَإِنَّ ٱللَّهَ لَعَفُوٌّ غَفُورٞ
2. உங்களில் எவரேனும் தம் மனைவிகளில் எவளையும், தன் தாயென்று கூறிவிடுவதனால், அவள் அவர்களுடைய (உண்மைத்) தாயாகிவிடமாட்டாள். அவர்களைப் பெற்றெடுத்தவர்கள்தான் (உண்மைத்) தாயாவார்கள். (இதற்கு மாறாக எவளையும் எவரும் தாயென்று கூறினால் கூறுகின்ற) அவர்கள் நிச்சயமாகத் தகாததும், பொய்யானதுமான ஒரு வார்த்தையையே கூறுகின்றனர். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், பிழை பொறுப்பவன் ஆவான். (ஆகவே, இத்தகைய குற்றம் செய்தவர்கள் அல்லாஹ்விடம் மன்னிப்பைக் கோரவும்.)
வசனம் : 3
وَٱلَّذِينَ يُظَٰهِرُونَ مِن نِّسَآئِهِمۡ ثُمَّ يَعُودُونَ لِمَا قَالُواْ فَتَحۡرِيرُ رَقَبَةٖ مِّن قَبۡلِ أَن يَتَمَآسَّاۚ ذَٰلِكُمۡ تُوعَظُونَ بِهِۦۚ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٞ
3. ஆகவே, எவரேனும் தங்கள் மனைவிகளை(த் தன்) தாய்க்கு ஒப்பிட்டுக் கூறிய பின்னர், அவர்களிடம் திரும்ப (சேர்ந்துகொள்ள) விரும்பினால், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தொடுவதற்கு முன்னதாகவே (இவ்வாறு ஒப்பிட்டுக் கூறிய குற்றத்திற்குப் பரிகாரமாக) ஓர் அடிமையை விடுதலை செய்யவேண்டும். இதை (அல்லாஹ்) உங்களுக்கு உபதேசம் செய்கிறான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவன் ஆவான்.
வசனம் : 4
فَمَن لَّمۡ يَجِدۡ فَصِيَامُ شَهۡرَيۡنِ مُتَتَابِعَيۡنِ مِن قَبۡلِ أَن يَتَمَآسَّاۖ فَمَن لَّمۡ يَسۡتَطِعۡ فَإِطۡعَامُ سِتِّينَ مِسۡكِينٗاۚ ذَٰلِكَ لِتُؤۡمِنُواْ بِٱللَّهِ وَرَسُولِهِۦۚ وَتِلۡكَ حُدُودُ ٱللَّهِۗ وَلِلۡكَٰفِرِينَ عَذَابٌ أَلِيمٌ
4. (விடுதலை செய்யக்கூடிய அடிமையை) எவரேனும் பெற்றிருக்காவிடில், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தொடுவதற்கு முன்னதாகவே, (அவன்) இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும். (இவ்வாறு நோன்பு நோற்க) சக்தி பெறாதவன். அறுபது ஏழைகளுக்கு (மத்திய தரமான) உணவளிக்க வேண்டும். அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நீங்கள் (மெய்யாகவே) நம்பிக்கை கொண்டிருக்கிறீர்கள் என்பதற்காக (இந்த கட்டளையை இவ்வாறு இலேசாக்கி வைத்தான்). இவை அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகளாகும். (இதை) மீறுபவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையுண்டு.
வசனம் : 5
إِنَّ ٱلَّذِينَ يُحَآدُّونَ ٱللَّهَ وَرَسُولَهُۥ كُبِتُواْ كَمَا كُبِتَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۚ وَقَدۡ أَنزَلۡنَآ ءَايَٰتِۭ بَيِّنَٰتٖۚ وَلِلۡكَٰفِرِينَ عَذَابٞ مُّهِينٞ
5. எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்கிறார்களோ அவர்கள், நிச்சயமாக அவர்களுக்கு முன்னுள்ளோர் இழிவுபடுத்தப்பட்டபடியே இழிவுபடுத்தப் படுவார்கள். நிச்சயமாக (இதைப் பற்றி)த் தெளிவான வசனங்களையே நாம் இறக்கி இருக்கிறோம். (அதற்கு) மாறுசெய்பவர்களுக்கு இழிவு தரும் வேதனையுண்டு.
வசனம் : 6
يَوۡمَ يَبۡعَثُهُمُ ٱللَّهُ جَمِيعٗا فَيُنَبِّئُهُم بِمَا عَمِلُوٓاْۚ أَحۡصَىٰهُ ٱللَّهُ وَنَسُوهُۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ شَهِيدٌ
6. அவர்கள் அனைவரையும் அல்லாஹ் (உயிர் கொடுத்து) எழுப்பும் நாளில், அவர்கள் செய்தவற்றைப் பற்றி அவர்களுக்கு அறிவிப்பான். அதை அவர்கள் மறந்துவிட்டபோதிலும், அவற்றை அல்லாஹ் சேகரித்து வைக்கிறான். (அவர்கள் செய்யும்) அனைத்திற்கும் அல்லாஹ் (நன்கறிந்த) சாட்சியாளன் ஆவான்.

வசனம் : 7
أَلَمۡ تَرَ أَنَّ ٱللَّهَ يَعۡلَمُ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۖ مَا يَكُونُ مِن نَّجۡوَىٰ ثَلَٰثَةٍ إِلَّا هُوَ رَابِعُهُمۡ وَلَا خَمۡسَةٍ إِلَّا هُوَ سَادِسُهُمۡ وَلَآ أَدۡنَىٰ مِن ذَٰلِكَ وَلَآ أَكۡثَرَ إِلَّا هُوَ مَعَهُمۡ أَيۡنَ مَا كَانُواْۖ ثُمَّ يُنَبِّئُهُم بِمَا عَمِلُواْ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۚ إِنَّ ٱللَّهَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٌ
7. (நபியே!) வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அனைத்தையும் நிச்சயமாக அல்லாஹ் அறிகிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அவர்களில் மூன்று பேர்கள் (கூடிப் பேசும்) ரகசியத்தில் அவன் நான்காவதாக இல்லாமல் இல்லை. ஐந்து பேர்கள் (கூடிப் பேசும்) இரகசியத்தில் அவன் ஆறாவதாக இல்லாமலில்லை. இதைவிட குறைவாகவோ அல்லது அதிகமாகவோ உள்ளவர்கள் (கூடிப் பேசும்) இரகசியத்திலும், அவன் அவர்களுடன் இல்லாமல் இல்லை. இவ்வாறு அவர்கள் எங்கிருந்த போதிலும் (ரகசியம் பேசினால் அவன் அவர்களுடைய ரகசியங்களை அறிந்து கொள்கிறான்). பின்னர், அவர்கள் செய்தவற்றைப் பற்றி அவர்களுக்கு மறுமை நாளில் அறிவி(த்து அதற்குரிய கூலியைக் கொடு)க்கிறான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன் ஆவான்.
வசனம் : 8
أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ نُهُواْ عَنِ ٱلنَّجۡوَىٰ ثُمَّ يَعُودُونَ لِمَا نُهُواْ عَنۡهُ وَيَتَنَٰجَوۡنَ بِٱلۡإِثۡمِ وَٱلۡعُدۡوَٰنِ وَمَعۡصِيَتِ ٱلرَّسُولِۖ وَإِذَا جَآءُوكَ حَيَّوۡكَ بِمَا لَمۡ يُحَيِّكَ بِهِ ٱللَّهُ وَيَقُولُونَ فِيٓ أَنفُسِهِمۡ لَوۡلَا يُعَذِّبُنَا ٱللَّهُ بِمَا نَقُولُۚ حَسۡبُهُمۡ جَهَنَّمُ يَصۡلَوۡنَهَاۖ فَبِئۡسَ ٱلۡمَصِيرُ
8. (நபியே!) ரகசியமே கூடாதென்று தடுக்கப்பட்டிருந்தும், தடுக்கப்பட்டதை நோக்கியே செல்லும் அவர்களை நீர் கவனித்தீரா? பாவத்திற்கும், வரம்பு மீறுவதற்கும், (நம்) தூதருக்கு மாறு செய்வதற்குமே, அவர்கள் ரகசியமாகச் சதி ஆலோசனை செய்கின்றனர். பின்னர் அவர்கள் உங்களிடம் வந்தாலோ, அல்லாஹ் உங்களுக்குக் கூறாத வார்த்தையைக் (கொண்டு, அதாவது: ‘‘அஸ்ஸலாமு அலைக்க' உம்மீது சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக! என்று கூறுவதற்குப் பதிலாக, ‘‘அஸ்ஸாமு அலைக்க' உமக்கு மரணம் உண்டாவதாக! என்று) கூறிவிட்டு, அவர்கள் தங்களுக்குள் (இவர் உண்மையான தூதராக இருந்தால் ‘‘பரிகாசமாக) நாம் கூறியதைப் பற்றி, அல்லாஹ் நம்மை வேதனை செய்யமாட்டானா?'' என்றும் கூறுகின்றனர். நரகமே அவர்களுக்குப் போதுமானதாகும். அதில் அவர்கள் நுழைந்தே தீருவார்கள். அது செல்லுமிடங்களில் மகா கெட்டது.
வசனம் : 9
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا تَنَٰجَيۡتُمۡ فَلَا تَتَنَٰجَوۡاْ بِٱلۡإِثۡمِ وَٱلۡعُدۡوَٰنِ وَمَعۡصِيَتِ ٱلرَّسُولِ وَتَنَٰجَوۡاْ بِٱلۡبِرِّ وَٱلتَّقۡوَىٰۖ وَٱتَّقُواْ ٱللَّهَ ٱلَّذِيٓ إِلَيۡهِ تُحۡشَرُونَ
9. நம்பிக்கையாளர்களே! உங்களுக்குள் நீங்கள் ரகசியம் பேசினால் பாவம் செய்வதற்காகவும், வரம்பு மீறுவதற்காகவும், (நம்) தூதருக்கு மாறுசெய்வதற்காகவும், ரகசியம் பேசாதீர்கள். ஆயினும், நன்மை செய்வதற்காகவும் இறையச்சத்திற்காகவும் இரகசியம் பேசலாம். (அனைத்தையும் அறிந்த) அல்லாஹ்வின் சமூகத்திற்கு நீங்கள் கொண்டு போகப்படுவீர்கள். ஆகவே, அவனுக்கு நீங்கள் பயந்து நடந்துகொள்ளுங்கள்.
வசனம் : 10
إِنَّمَا ٱلنَّجۡوَىٰ مِنَ ٱلشَّيۡطَٰنِ لِيَحۡزُنَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَلَيۡسَ بِضَآرِّهِمۡ شَيۡـًٔا إِلَّا بِإِذۡنِ ٱللَّهِۚ وَعَلَى ٱللَّهِ فَلۡيَتَوَكَّلِ ٱلۡمُؤۡمِنُونَ
10. (அவர்களை) ஷைத்தான் இரகசியமாகப் பேச வைப்பதெல்லாம், நம்பிக்கை கொண்டவர்களுக்குக் கவலையை உண்டுபண்ணுவதற்காகவே. அல்லாஹ்வுடைய நாட்டமின்றி, அவர்களுக்கு அது (-இரகசியம்) அறவே தீங்கிழைக்காது. ஆகவே, நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வையே நம்பியிருக்கவும்.
வசனம் : 11
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا قِيلَ لَكُمۡ تَفَسَّحُواْ فِي ٱلۡمَجَٰلِسِ فَٱفۡسَحُواْ يَفۡسَحِ ٱللَّهُ لَكُمۡۖ وَإِذَا قِيلَ ٱنشُزُواْ فَٱنشُزُواْ يَرۡفَعِ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُواْ مِنكُمۡ وَٱلَّذِينَ أُوتُواْ ٱلۡعِلۡمَ دَرَجَٰتٖۚ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٞ
11. நம்பிக்கையாளர்களே! (நீங்கள் ஒரு சபையிலிருக்கும் பொழுது, எவரேனும்) உங்களை நோக்கிச் ‘‘சபையில் நகர்ந்து இடம் கொடுங்கள்'' என்று கூறினால், (அவ்வாறே) நீங்கள் நகர்ந்து இடம் கொடுங்கள். இடத்தை அல்லாஹ் உங்களுக்கு விசாலமாக்கி கொடுப்பான். தவிர, (சபையில் ஒரு காரணத்திற்காக உங்களை நோக்கி) ‘‘எழுந்து (சென்று) விடுங்கள்'' என்று கூறப்பட்டால், அவ்வாறே நீங்கள் எழுந்து (சென்று) விடுங்கள். (இவ்வாறு நடந்துகொள்ளும்) உங்களிலுள்ள நம்பிக்கையாளர்களுக்கும், கல்வி ஞானம் உடையவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிவான்.

வசனம் : 12
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا نَٰجَيۡتُمُ ٱلرَّسُولَ فَقَدِّمُواْ بَيۡنَ يَدَيۡ نَجۡوَىٰكُمۡ صَدَقَةٗۚ ذَٰلِكَ خَيۡرٞ لَّكُمۡ وَأَطۡهَرُۚ فَإِن لَّمۡ تَجِدُواْ فَإِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٌ
12. நம்பிக்கையாளர்களே! நீங்கள் நம் தூதருடன் இரகசியம் பேச விரும்பினால், உங்கள் இரகசியத்திற்கு முன்னதாகவே (ஏழைகளுக்கு) ஏதும் தானம் செய்து விடுங்கள். இது உங்களுக்கு நன்மையும் பரிசுத்தத் தன்மையும் ஆகும். (தானம் கொடுப்பதற்கு எதையும்) நீங்கள் அடைந்திரா விட்டால், (அதைப்பற்றி உங்கள் மீது குற்றமில்லை.) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன், மகா கருணையுடையவன் ஆவான்.
வசனம் : 13
ءَأَشۡفَقۡتُمۡ أَن تُقَدِّمُواْ بَيۡنَ يَدَيۡ نَجۡوَىٰكُمۡ صَدَقَٰتٖۚ فَإِذۡ لَمۡ تَفۡعَلُواْ وَتَابَ ٱللَّهُ عَلَيۡكُمۡ فَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَ وَأَطِيعُواْ ٱللَّهَ وَرَسُولَهُۥۚ وَٱللَّهُ خَبِيرُۢ بِمَا تَعۡمَلُونَ
13. நீங்கள் உங்கள் இரகசியத்திற்கு முன்னர், நீங்கள் தானம் கொடுப்பதைப் பற்றிப் பயந்துவிட்டீர்களா? (மெய்யாகவே) உங்களால் (தானம்) செய்ய முடியாவிடில், அல்லாஹ் உங்களை மன்னித்து விடுவான். எனினும், தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் (உண்மையாகவே) கீழ்ப்படிந்து நடந்து கொள்ளுங்கள். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான்.
வசனம் : 14
۞ أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ تَوَلَّوۡاْ قَوۡمًا غَضِبَ ٱللَّهُ عَلَيۡهِم مَّا هُم مِّنكُمۡ وَلَا مِنۡهُمۡ وَيَحۡلِفُونَ عَلَى ٱلۡكَذِبِ وَهُمۡ يَعۡلَمُونَ
14. (நபியே!) அல்லாஹ் எவர்கள் மீது கோபமானானோ, அந்த மக்களுடன் உறவாடுகிறவர்களை நீர் பார்த்தீரா? இவர்கள் உங்களிலும் உள்ளவர்களல்ல; அவர்களிலும் உள்ளவர்களல்ல. இவர்கள் நன்கறிந்திருந்தும் (உங்களுடன் இருப்பதாக) வேண்டுமென்றே பொய் சத்தியம் செய்கின்றனர்.
வசனம் : 15
أَعَدَّ ٱللَّهُ لَهُمۡ عَذَابٗا شَدِيدًاۖ إِنَّهُمۡ سَآءَ مَا كَانُواْ يَعۡمَلُونَ
15. இவர்களுக்காக அல்லாஹ், கடினமான வேதனையை தயார்படுத்தி வைத்திருக்கிறான். நிச்சயமாக இவர்கள் செய்யும் காரியம் மகா கெட்டது.
வசனம் : 16
ٱتَّخَذُوٓاْ أَيۡمَٰنَهُمۡ جُنَّةٗ فَصَدُّواْ عَن سَبِيلِ ٱللَّهِ فَلَهُمۡ عَذَابٞ مُّهِينٞ
16. இவர்கள் தங்கள் (பொய்) சத்தியங்களைக் கேடயமாக வைத்துக்கொண்டு (மக்களை) அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து தடுத்துவிட்டனர். ஆகவே, இவர்களுக்கு மிக்க இழிவு தரும் வேதனையுண்டு.
வசனம் : 17
لَّن تُغۡنِيَ عَنۡهُمۡ أَمۡوَٰلُهُمۡ وَلَآ أَوۡلَٰدُهُم مِّنَ ٱللَّهِ شَيۡـًٔاۚ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ
17. இவர்களுடைய பொருள்களும், இவர்களுடைய சந்ததிகளும், அல்லாஹ்வி(ன் வேதனையி)லிருந்து எதையும் இவர்களை விட்டும் தடுத்துவிடாது. இவர்கள் நரகவாசிகள்தான்; அதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.
வசனம் : 18
يَوۡمَ يَبۡعَثُهُمُ ٱللَّهُ جَمِيعٗا فَيَحۡلِفُونَ لَهُۥ كَمَا يَحۡلِفُونَ لَكُمۡ وَيَحۡسَبُونَ أَنَّهُمۡ عَلَىٰ شَيۡءٍۚ أَلَآ إِنَّهُمۡ هُمُ ٱلۡكَٰذِبُونَ
18. அல்லாஹ் இவர்கள் அனைவரையும் (உயிர் கொடுத்து) எழுப்பும் நாளிலும் (இன்றைய தினம்) உங்களிடம் அவர்கள் சத்தியம் செய்ததைப் போன்று, அல்லாஹ்விடத்திலும் சத்தியம் செய்துவிட்டு, நிச்சயமாகத் தாங்கள் ஏதோ (தப்பித்துக் கொள்ளக்கூடிய ஒரு நல்ல) காரியத்தைச் செய்து விட்டதாகவும் எண்ணிக் கொள்வார்கள். மெய்யாகவே இவர்கள்தான் பொய்யர்களன்றோ!
வசனம் : 19
ٱسۡتَحۡوَذَ عَلَيۡهِمُ ٱلشَّيۡطَٰنُ فَأَنسَىٰهُمۡ ذِكۡرَ ٱللَّهِۚ أُوْلَٰٓئِكَ حِزۡبُ ٱلشَّيۡطَٰنِۚ أَلَآ إِنَّ حِزۡبَ ٱلشَّيۡطَٰنِ هُمُ ٱلۡخَٰسِرُونَ
19. ஷைத்தான் இவர்களை ஜெயித்து, அல்லாஹ்வைப் பற்றிய எண்ணத்தையே இவர்களுக்கு மறக்கடித்து விட்டான். இவர்கள்தான் ஷைத்தானுடைய கூட்டத்தினர். ஷைத்தானுடைய கூட்டத்தினர் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
வசனம் : 20
إِنَّ ٱلَّذِينَ يُحَآدُّونَ ٱللَّهَ وَرَسُولَهُۥٓ أُوْلَٰٓئِكَ فِي ٱلۡأَذَلِّينَ
20. எவர்கள், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்க்கிறார்களோ, அவர்கள் இழிவுக்குள்ளாவார்கள்.
வசனம் : 21
كَتَبَ ٱللَّهُ لَأَغۡلِبَنَّ أَنَا۠ وَرُسُلِيٓۚ إِنَّ ٱللَّهَ قَوِيٌّ عَزِيزٞ
21. தானும், தன் தூதர்களுமே நிச்சயமாக வெல்வார்கள் என்று அல்லாஹ் விதித்து விட்டான். நிச்சயமாக அல்லாஹ் பலவானும் (அனைவரையும்) மிகைத்தவனும் ஆவான்.

வசனம் : 22
لَّا تَجِدُ قَوۡمٗا يُؤۡمِنُونَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ يُوَآدُّونَ مَنۡ حَآدَّ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَلَوۡ كَانُوٓاْ ءَابَآءَهُمۡ أَوۡ أَبۡنَآءَهُمۡ أَوۡ إِخۡوَٰنَهُمۡ أَوۡ عَشِيرَتَهُمۡۚ أُوْلَٰٓئِكَ كَتَبَ فِي قُلُوبِهِمُ ٱلۡإِيمَٰنَ وَأَيَّدَهُم بِرُوحٖ مِّنۡهُۖ وَيُدۡخِلُهُمۡ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَاۚ رَضِيَ ٱللَّهُ عَنۡهُمۡ وَرَضُواْ عَنۡهُۚ أُوْلَٰٓئِكَ حِزۡبُ ٱللَّهِۚ أَلَآ إِنَّ حِزۡبَ ٱللَّهِ هُمُ ٱلۡمُفۡلِحُونَ
22. (நபியே!) எந்த மக்கள் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் (மெய்யாகவே) நம்பிக்கை கொண்டிருக்கின்றார்களோ அவர்கள், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்பவர்களிடம் நேசம் கொண்டு உறவாடுவதை நீர் காண மாட்டீர். அவர்கள், தங்கள் பெற்றோர்களாக அல்லது தங்கள் சந்ததிகளாக அல்லது தங்கள் சகோதரர்களாக அல்லது தங்கள் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் சரியே! (அவர்களை நம்பிக்கையாளர்கள் நேசிக்க மாட்டார்கள்.) இவர்களுடைய உள்ளங்களில்தான் அல்லாஹ் நம்பிக்கையை பதியவைத்துத் தன் அருளைக் கொண்டும் இவர்களைப் பலப்படுத்தி வைத்திருக்கிறான். தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்கங்களிலும் இவர்களைப் புகுத்தி விடுவான். அதில் என்றென்றும் இவர்கள் தங்கி விடுவார்கள். இவர்களைப் பற்றி அல்லாஹ் திருப்தியடைவான். அவர்களும் அல்லாஹ்வைப் பற்றித் திருப்தியடைவார்கள். இவர்கள்தான் அல்லாஹ்வின் கூட்டத்தினர். நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர்தான் வெற்றி அடைந்தவர்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
வெற்றிகரமாக அனுப்பப்பட்டது